எனக்கு கடந்த 2 வருடங்களாக அல்சர் மற்றும் வாய் வழியாக அதிக ஏப்பம் வருகிறது. இது எதனால்?
ஆரம்ப கட்ட அல்சர் இருந்து குணமானவன் என்ற தகுதியில், எனக்கு மருத்துவர் சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன்.
அல்சர் வருவதற்கு முழு முதல் காரணம் பசியறிந்தும் நேரமறிந்தும் உணவு உட்கொள்ளாமையே. சரியான நேரத்தில் சரியான உணவையே நாம் உட்கொள்ளவேண்டும்.
அதிகமாக பொரித்த, காரமான, மசாலா ஏகத்திற்கு சேர்க்கப்பட்ட … இவை போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது, குறைந்தது ஒரு குறிப்பிட்ட வயதிற்குப்பிறகாவது.
உணவுக்கு அடுத்தபடி, மனது. அடிக்கடி பதட்டப்படுதல், உணர்ச்சிவசப்படுதல், கோபம், வெறுப்பு போன்ற அதீத உணர்ச்சிகளுக்கு ஆட்படுதல் … இவை யாவுமே அல்சருக்கு எதிரிகள். காரணம் இப்படிப்பட்ட அதீத உணர்ச்சிவசப்படுகையில் வயிற்றில் அமில சுரப்பு அதிகமாகும். அது வயிற்றுப்புண்ணை இன்னமும் மோசமாக்கும்.
ஒருவேளை, அடிக்கடி வரும் ஏப்பமேகூட அல்சரால் இருக்கக்கூடும்.
ஆகவே அன்பரே, முதலில் மருத்துவரை சந்தித்து அல்சரை குணப்படுத்த மருத்துவம் மேற்கொள்ளுங்கள் - இதுவரை இல்லை என்றால். அவரே உங்களுக்கான உணவுகளை பரிந்துரை செய்வார். இருப்பினும் கூடுதலாக இவற்றையும் பரிசீலிக்கலாம்.
கட்டாயமாக மூன்று வேளை உணவு உட்கொள்ளுங்கள். காலை 8:30–9:00-க்குள் காலை உணவை முடித்துவிடுங்கள். எக்காரணம் கொண்டும் காலை உணவை தவிர்க்கவே தவிர்க்காதீர்கள். காரணம் வயிறு வெகுநேரம் காலியாக இருக்கக்கூடாது.
அமிலவகை உணவுகள் (புளிப்பான, புளி, எலுமிச்சை போன்றவை) தவிர்க்கப்படவேண்டும், அல்லது குறைக்கப்படவேண்டும் ;
அகத்திக்கீரை, தேங்காய்ப்பால், மணித்தக்காளிக்கீரை போன்றவை வயிற்றுப்புண்ணை குணமாக்குவதில் வல்லவை ;
பொட்டுக்கடலையை அவ்வப்போது கொறித்துக்கொண்டே இருக்கலாம். இது வயிற்றின் உட்சுவரைச்சுற்றி ஒரு மெல்லிய படலப்பூச்சை உருவாக்குகிறது, ஆகவே அல்சர் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது என்கிறார்கள் (சித்த மருத்துவர் சிவராமன் அவர்கள் சொன்னார் என்ற நினைவு)
மாதுளை, தர்ப்பூசணி போன்ற பழங்களை சாப்பிடலாம்.
மனதை எளிமையாக வைத்துக்கொள்ள தியானப் பயிற்சியை முயன்று பாருங்கள்.
0 Comments