பெண்களுக்கு குழந்தை பிறந்தவுடன் ஏற்படும் குறுக்கு வலியை சரி செய்வது எப்படி?

பெண்களுக்கு குழந்தை பிறந்தவுடன் ஏற்படும் குறுக்கு வலியை சரி செய்வது எப்படி?


பெண்களுக்கு குழந்தை பிறந்தவுடன் ஏற்படும் குறுக்கு வலியை சரி செய்வது எப்படி?


என்னதான் வைத்திய முறைகள் பலவற்றை மேற்கொண்டாலும் குழந்தை பிறந்த பின்பும் வலி இருக்கத்தான் செய்யும். ஏனெனில் பிரசவம் என்பது சாதாரண காரியமல்ல.

பிரசவத்திற்கு பின் வயிற்றில் உள்ள கழிவுகள் எல்லாம் நீங்கி வயிறு சுத்தமாகி விட்டாலே பாதி வலி பறந்துவிடும். குழந்தையின் முகத்தைப் பார்க்கும் பொழுது மீதி வலியும் மறந்து விடும்.

அப்படி வயிற்றில் உள்ள கழிவுகள் சீக்கிரம் வெளியேறுவதற்கும், பால் அதிகம் நன்கு சுரக்கவும், உடல் புத்துணர்ச்சி பெறவும் எனது பாட்டி செய்த ஒரு வைத்திய லேகியத்தை இங்கு கூறுகிறேன்.

அளவுகள் எல்லாம் மிகச் சரியாக தெரியாது ஊரிலுள்ள ஒரு நாட்டு மருந்து கடையில் பிரசவ லேகியம் செய்ய பொருட்கள் கொடுங்கள் என்றால் அவர்களே சிறிது சிறிது எடுத்து கலந்து மொத்தமாக தருவார்கள்.

அந்தப் பொருட்கள்

சுக்கு

மிளகு

திப்பிலி

சித்தரத்தை

லவங்கம்

அதிமதுரம்

கண்டத்திப்பிலி

ஓமம், சீரகம்

இவற்றுடன் இவற்றின் மொத்த அளவை விட ஒரு பங்கு அதிகமாக கருப்பட்டி அல்லது பனைவெல்லம் ஆனால் கருப்பட்டி தான் சிறந்தது.

நல்லெண்ணெய் அல்லது நெய் அல்லது இரண்டும் கலந்தும் பயன்படுத்தலாம்.

இதனை லேகியம் போல செய்து தினமும் ஒவ்வொரு உருண்டை சாப்பிட வேண்டும்.

எனது பாட்டி ஒரு வாரத்திற்குத் தேவையான மருந்து பொருட்களை வறுத்து பொடி செய்து அதனுடன் கருப்பட்டியை நன்கு துருவி ஒன்றாக கலந்து பிசைந்து அதில் நல்லெண்ணெய் மற்றும் நெய் ஊற்றி ஒரு டப்பாவில் போட்டு வைத்து விடுவார். ஒரு வாரத்தில் அது தீர்ந்தபின் மீண்டும் அதேபோல் கொஞ்சமாக செய்து கொடுப்பார் இவ்வாறு செய்தால் மருந்து பொருட்கள் வீணாகாமல் இருக்கும்.

கூடவே கடுகு பொடி செய்து அதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவு சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட கொடுத்தார்கள். கடுகு நல்லதொரு வலி நீக்கியாகச் செயல்படும். வெறும் கடுகு கசக்கும் எனவே கடுகை தனியே வறுத்து பின் இட்லி பொடி நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்களோ அதேபோல இதற்கும் கறிவேப்பிலை உளுத்தம் பருப்பு வரமிளகாய் போன்றவற்றையும் வறுத்து பொடித்து கொள்ளலாம்.

அடுத்ததாக பூண்டு பால், நல்லெண்ணெயில் வறுத்த சுண்டைக்காய் அல்லது சுண்டைவற்றல், மணத்தக்காளி காய் அல்லது மணத்தக்காளி காயின் வற்றல் இவையெல்லாம் தினமும் எடுத்துக் கொள்ளும் பொழுது உடல் பலம் பெற்றுவிடும்.

முக்கியமாக கிராமப்பகுதிகளில் செலவு ரசம் என்று சொல்வார்கள். மிளகு சீரகம் கறிவேப்பிலை பூண்டு இவை எல்லாம் வறுத்து அரைத்து வைக்கும் ரசம். மகப்பேறுக்கு பின் இந்த ரசம் அதிக அளவு சாப்பிட பால் நன்கு சுரக்கும்.

கூடவே சற்று மெதுவாக லேசான இயக்கங்களை முதுகுப் பகுதிக்கு கொடுத்து வழக்கமான வேலைகளை செய்ய ஆரம்பித்தாலே பிரசவத்தினால் ஏற்பட்ட வலி தானாக சரியாகிவிடும்.

0 Comments